Type Here to Get Search Results !

Godson Vincent Bible Study | வேதாகம திருச்சபை! 1-5 The Biblical Church | Jesus Sam

=======================
வேதாகம திருச்சபை! (The Biblical Church) (பகுதி - 1)
=======================
திருச்சபை என்பது என்ன?
"இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" என்றார் ஆண்டவர். (மத்.16:18)

இதில் *'சபை'* என்பதற்கு *ἐκκλησία* (ekklēsia - எக்லீசியா) என்கிற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

*'எக்லீசியா'* என்பதற்கு தங்கள் வீடுகளில் இருந்து ஏதோ ஒரு பொது இடத்திற்கு அழைக்கப்பட்ட குடிமக்கள் கூட்டம் என்று அர்த்தம். சுருங்கச் சொன்னால் *"வெளியே அழைக்கப்பட்டவர்கள்"* என்று பொருள்.

கிறிஸ்தவ சூழலில், 
இயேசுகிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் அழைக்கப்பட்ட தேவஜனங்களே திருச்சபை ஆவர். (அப்.26:18)

அந்தகாரத்தினின்று தேவனால் அவருடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிற கிறிஸ்தவர்களே திருச்சபை. (1பேதுரு 2:9)

'சபை' அல்லது 'ஆலயம்' என்று எழுதப்பட்டுள்ள கட்டிடங்கள் அசல் சபையல்ல, அடையாளத்திற்காக அப்படி குறிப்பிடுகிறோம் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

*தேவஜனங்கள் கூடிவருகிற இடத்திற்கு பெயர் சபை அல்ல, அங்கு கூடிவருகிற தேவஜனங்களே மெய்யான சபை!* 

தேவன் வாசம்பண்ணுகிறதாக நம்பின இடத்தை யூதர்கள் தேவாலயமாக கருதினார்கள்.
(1நாளா.28:2; 1இராஜா.9:3; சங்.132:13,14; மத்.26:21) பிறவினத்தாராகிய விக்கிரகாராதனைக்காரரும் தாங்கள் கூடிவருகிற, மனுஷரின் கைகளால் கட்டப்பட்ட கட்டிடங்களையே ஆலயமாகக் கருதினர். (அப்.17:24)

சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் (தேவன்) என்றென்றைக்கும்
நம்முடனே வாசம்பண்ணி நமக்குள்ளே இருப்பதால், நாமே தேவாலயமாயிருக்கிறோம்! (யோவான் 14:16,17)

*நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும்,* தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். *தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்* என்கிறார் பவுல். (1கொரி.3:16,17)

"அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் *கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்.* அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். 
அவர்மேல் *மாளிகை முழுவதும்* இசைவாய் இணைக்கப்பட்டு, *கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.* 
அவர்மேல் *நீங்களும்* ஆவியினாலே *தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறீர்கள்"* என்று பவுல் சொல்லுகிறதிலிருந்து, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயம் மற்றும் தேவனுடைய வாசஸ்தலம் என்பது தேவஜனங்களே என்பதை அறியலாம். (எபேசி.2:20-22)

பேதுரு சொல்லுகிறபடி: மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்து, ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிற கிறிஸ்தவர்களே தேவனுடைய திருச்சபையாய் இருக்கிறோம். (1பேதுரு 2:4,5)

*கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிக்கக் கூடிவருகிற இடம் எவ்வளவு பிரமாண்டமானதாகவும், அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தாலும், அதில் ஒரு விசேஷமும் இல்லை. அங்கே கூடிவருகிற தேவனுடைய அசல் சபையாகிய தேவஜனங்களே விசேஷமானவர்கள்!*

தேவனுடைய ஜனங்கள் கூடிவருகிற இடமல்ல, அங்கு கூடிவருகிற தேவஜனங்களே வேதாகமத் திருச்சபையாவர்!!

[சபை கூடிவருகிறதற்கு தனி கட்டிடம் அவசியமில்லை என்று இதை அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டாம்]

க. காட்சன் வின்சென்ட்
       (கோயம்பத்தூர்)
             8946050920


=====================
வேதாகம திருச்சபை! (The Biblical Church) (பகுதி - 2)
=====================
வீடோ, தனி கட்டிடமோ, ஏன் வேதாகம திருச்சபை அல்ல?
சபை கூடிவருகிறதற்கு வீடு (அப்.2:46; 12:12; ரோமர் 16:5; 1கொரி.16:19), வித்தியாசாலை (school) (அப்.19:9) போன்ற கட்டிடங்கள் அவசியப்படுகின்றன. ஆகிலும் அவைகளை 'சபை' என்று வேதம் குறிப்பிடவில்லை.

"தாமதிப்பேனாகில், *தேவனுடைய வீட்டிலே* நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். *அந்த வீடு* ஜீவனுள்ள தேவனுடைய *சபையாய்ச்* சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது" என்று பவுல் சொல்லுகிறதைவைத்து (1தீமோத்.3:15), வீடாகிய ஒரு கட்டிடத்தையே இங்கு 'சபை' என்று பவுல் சொல்லுகிறதாக புரிந்துகொள்ளுகிற பலர் உண்டு.

"அந்த வீடு" என்று தேவனுடைய சபையையே பவுல் குறிப்பிடுகிறார். தேவனுடைய சபையையே "தேவனுடைய வீடு" என்றும் குறிப்பிடுகிறார்.

*'சபை'* என்பதற்கு *ἐκκλησία* (ekklēsia - எக்லீசியா) என்கிற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

*'எக்லீசியா'* என்பதற்கு தங்கள் வீடுகளில் இருந்து ஏதோ ஒரு பொது இடத்திற்கு அழைக்கப்பட்ட குடிமக்கள் கூட்டம் என்று அர்த்தம். சுருங்கச் சொன்னால் *"வெளியே அழைக்கப்பட்டவர்கள்"* என்று இதற்கு பொருள். 

சபை என்பது  உயிரற்ற கட்டிடங்கள் அல்ல, உலகத்திலிருந்து தேவனிடத்திற்கு அழைக்கப்பட்டு, கிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டுவருகிற இரட்சிக்கப்பட்ட மக்கள் கூட்டமே! (அப்.2:47; அப்.26:18; 1பேதுரு 2:9; 1கொரி.3:16,17; எபேசி.2:20-22; 1பேதுரு 2:4,5)
 
*உயிரற்ற கட்டிடங்கள் அல்ல, உயிருள்ள தேவனுடைய ஜனங்களே சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கமுடியும்!* 

கிறிஸ்தவின்மேல் உள்ள நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறவர்கள் அவருடைய வீடாயிருப்போம் என்கிறது வேதம். (எபிரே.3:6)

இப்படியிருக்க, தேவனுடைய வீடு என்பது தேவனுடைய ஜனங்களாகிய அசல் சபையையே குறிக்கிறது என்பதை நாம் அறியவேண்டும்.

சபை கூடிவரும் இடம் ஏன் வேதாகம சபையாக இருக்கமுடியாது?

அக்காலத்திலே *எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று.* .... சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, *புருஷரையும் ஸ்திரிகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.* (அப்.8:1,3)

உயிரற்ற கட்டிடத்திற்கு மிகுந்த துன்பம் உண்டானதாக இங்கு லூக்கா குறிப்பிடவில்லை. உயிருள்ள தேவஜனங்களுக்கு உண்டான உபத்திரவத்தையே சபைக்கு உண்டான உபத்திரவமாக அவர் குறிப்பிடுகிறார்.

*"கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும்,* எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற *நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும்"* என்று பவுல் எழுதுகிறதிலிருந்து (1கொரிந்.1:1): உயிரற்ற கட்டிடங்களல்ல, கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிறவர்களே தேவனுடைய சபை என்பதை அறியலாம்.

"பவுலும், சில்வானும், தீமோத்தேயும், *நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு"* என்று பவுல் எழுதுகிறதிலிருந்து: உயிரற்ற கட்டிடங்களல்ல, நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிறவர்களே சபை என்பதை அறியலாம். (2தெச.1:1)

"பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், *உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும்"* என்று பவுல் எழுதுகிறதிலிருந்து: வீடல்ல, வீட்டிலே கூடிவருகிற தேவஜனங்களே சபை என்பதை அறியலாம். (பிலே.1:2)

"அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் *சபைக்கு முன்பாகச் சாட்சி சொன்னார்கள்"* என்று யோவான் காயுவுக்கு சொல்லுகிறதிலிருந்து: உயிரற்ற கட்டிடங்களுக்கு முன்பாக அல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபைக்கு முன்பாக அவர்கள் சாட்சி சொன்னார்கள்" என்பதை அறியலாம். (3யோவான் 1:6)

*"நான் சபைக்கு எழுதினேன்"* என்று யோவான் சொல்லுகிறதிலிருந்து: அவர் உயிரற்ற கட்டிடத்திற்கு அல்ல, உயிருள்ள தேவனுடைய ஜனங்களாகிய சபைக்கு எழுதினார் என்பதை விளங்கிக்கொள்ளலாம். (3யோவான் 1:9)

மேற்காணும் வசனங்கள், தேவனுடைய ஜனங்கள் கூடிவருகிற ஒரு வீடோ அல்லது எந்தவகையான கட்டிடமோ சபையாக இருக்கமுடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

*மெய்யான திருச்சபையான தேவனுடைய ஜனங்களின் மனதில் அவர்கள் கூடிவருகிற இடங்களை 'சபை' என்று பதியவைப்பது சரியல்ல! அவைகளை நாம் 'சபை' என்று அடையாளப்படுத்தினாலும், உண்மையில் அவையல்ல, தாங்களே தேவனுடைய திருச்சபை என்பதை தேவஜனங்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்!*

சபை கூடிவருகிற இடம் வேதாகம சபையல்ல என்பதால், "சபை கூடிவருகிறதற்கு ஒரு இடம் அவசியமல்ல" என்று போதிக்கிறதும் வேத அடிப்படையிலான போதனை அல்ல. நாம் துவக்கத்தில் பார்த்ததுபோல, தேவனுடைய ஜனங்களாகிய திருச்சபை கூடிவருகிறதற்கு ஒரு வீடு அல்லது ஒரு தனி கட்டிடம் அவசியமாகும்!!

க. காட்சன் வின்சென்ட்
      (கோயம்பத்தூர்)
            8946050920


==============================
வேதாகம திருச்சபை! (The Biblical Church) (பகுதி - 3)
=============================

ஓர் இடத்தில் கூடிவருகிற தேவனுடைய ஜனங்களே திருச்சபை என்பதற்கு கூடுதலான ஆதாரங்கள்!

👉🏿 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் *சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து,* கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து *பெருகின.*
                  அப்.9:31

உயிரற்ற கட்டிடங்கள் அல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபைகளே
சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகமுடியும்!

👉🏿 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் *சபையோடே கூடியிருந்து,* அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள்.  
               அப்.11:26

உயிரற்ற கட்டிடங்களோடு அல்ல, உயிருள்ள தேவஜனங்களோடுதான் பர்னபாவும் சவுலும் கூடியிருந்து, அவர்களுக்கு உபதேசம்பண்ணியிருக்கமுடியும்!

👉🏿 அக்காலத்திலே ஏரோதுராஜா *சபையிலே சிலரைத்* துன்பப்படுத்தத்தொடங்கி,
                  அப்.12:1

"சபையிலே சிலரை" என்பதை "சபையாரில் சிலரை" என்றே எடுத்துக்கொள்ளமுடியும். உயிரற்ற கட்டிடத்தை 'சபை' என்று எடுத்துக்கொண்டால், "கட்டிடங்களிலே சிலரை" என்று சொல்லுகிறது பொருத்தமாயிராது. மேலும் உயிரற்ற கட்டிடங்களை 
துன்பப்படுத்தமுடியாது!

👉🏿 ஜெபஆலயத்தில் *கூடின சபை கலைந்துபோனபின்பு,* ....
               அப்.13:43

ஜெபஆலயத்தை அல்ல, அங்கு கூடினவர்களையே லூக்கா சபை என்று குறிப்பிடுகிறார். மேலும் உயிரற்ற கட்டிடங்கள் அல்ல, உயிருள்ள ஜனங்களே கலைந்துசெல்லமுடியும்!

👉🏿 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது *சபையைக் கூடிவரச்செய்து,* தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் *அறிவித்து,* 
               அப்.14:27

உயிரற்ற கட்டிடங்களை அல்ல, உயிருள்ள ஜனங்களையே கூடிவரசெய்து தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அப்போஸ்தலரால் அறிவித்திருக்கமுடியும்!

👉🏿 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவக்கு வந்து, *சபையைக் கூடிவரச்செய்து,* நிருபத்தை ஒப்புவித்தார்கள். 
               அப்.15:30

பவுல் குழுவினர் உயிரற்ற கட்டிடங்களை கூடிவரசெய்து, நிருபத்தை அவைகளிடம் ஒப்புவித்திருக்கமுடியாது. உயிருள்ள சபையாகிய விசுவாசிகளைக் கூடிவரசெய்தே 
நிருபத்தை அவர்களிடம் ஒப்புவித்திருக்கமுடியும்!

👉🏿 சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, *சபைகளைத் திடப்படுத்தினான்.* 
               அப்.15:41

உயிரற்ற கட்டிடங்களை அல்ல, உயிருள்ள சபையாகிய தேவஜனங்களையே பவுல் திடப்படுத்தியிருக்கமுடியும்!

👉🏿 அதினாலே *சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு,* நாளுக்குநாள் *பெருகின.* 
                  அப்.16:5

உயிரற்ற கட்டிடங்கள் அல்ல, உயிருள்ள அசல் சபையாகிய தேவஜனங்களே விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, பெருகமுடியும்!

👉🏿 செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், *சபையைச் சந்தித்து,* அந்தியோகியாவுக்குப் போனான். 
               அப்.18:22

பவுல் உயிற்ற கட்டிடங்களை அல்ல, உயிருள்ள உண்மை சபையாகிய தேவஜனங்களையே சந்தித்திருக்கமுடியும்!

👉🏿 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது *சபையை மேய்ப்பதற்கு* பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 
               அப்.20:28

சபையின் கண்காணிகள் உயிரற்ற கட்டிடங்களை அல்ல, உயிருள்ள சபையாகிய தேவனுடைய மந்தையையே மேய்க்கமுடியும்!

👉🏿 என்னையும் *சபையனைத்தையும் உபசரித்துவருகிற* காயு உங்களை வாழ்த்துகிறான். 
         ரோமர் 16:23

காயு உயிரற்ற கட்டிடங்களை அல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையையே உபசரித்திருக்கமுடியும்!

👉🏿 நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், *தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.* 
        1கொரி.10:33

ஒருவர் உயிரற்ற கட்டிடத்திற்கல்ல, உயிருள்ள சபையாகிய தேவஜனங்களுக்கே இடறலாக இருக்கமுடியும்!

👉🏿 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், *தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று* அறியக்கடவன். 
        1கொரி.11:16

உயிரற்ற கட்டிடங்கள் அல்ல, உயிருள்ள சபையாகிய தேவஜனங்களே வாக்குவாதம் செய்யும் வழக்கமற்றவர்களாய் இருக்கமுடியும்!

👉🏿 புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? *தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா?* 
        1கொரி.11:22

உயிரற்ற கட்டிடத்தை அல்ல, உயிருள்ள தேவனுடைய ஜனங்களாகிய சபையையே அசட்டைபண்ணி, வெட்கப்படுத்தியிருக்கமுடியும்!

👉🏿 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக* அவைகளில் தேறும்படி நாடுங்கள். 
        1கொரி.14:12

ஆவிக்குரிய வரங்களால் உயிரற்ற கட்டிடங்கள் அல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே பக்திவிருத்தியடையமுடியும்!

👉🏿 அன்றியும் சகோதரரே, *மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை* உங்களுக்கு அறிவிக்கிறோம். 
            2கொரி.8:1
*அவர்கள்* மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த *உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.* 
            2கொரி.8:2

மிகுந்த உபத்திரவம் மற்றும் கொடிய தரித்திரத்திலும் தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுக்கும் கிருபையை தேவன் உயிரற்ற கட்டிடங்களுக்கு அல்ல, உயிருள்ள தமது ஜனங்களாகிய சபைக்கே கொடுத்திருந்தார்!

👉🏿 ..... எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மபணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, *அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும்* இருக்கிறான். 
          2கொரி.8:19

தர்மபணத்தைக் கொண்டுபோகிறவர்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, ஒரு சகோதரனை உயிரற்ற கட்டிடங்களல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே தெரிந்து ஏற்படுத்தியிருக்கமுடியும்!

👉🏿 உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, *மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று,* அவர்களைக் கொள்ளையிட்டேன். 
          2கொரி.11:8

கொரிந்தியருக்கு ஊழியம் செய்யும்படிக்கு, உயிரற்ற கட்டிடங்களல்ல,
உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே பவுலுக்கு சம்பளத்தை கொடுத்திருக்கமுடியும்!

👉🏿 எதிலே *மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்?*  
        2கொரி.12:13

"எதிலே *மற்ற கட்டிடங்களுக்குக் குறைவாயிருந்தீர்கள்?"* என்று பவுல் உயிரற்ற கட்டிடங்களை கேட்டிருக்கமுடியாது. "எதிலே மற்ற இடங்களில் இருக்கும் தேவஜனங்களாகிய சபைகளுக்கு குறைவாயிருந்தீர்கள்?" என்றே கொரிந்து சபையாரையே பவுல் கேட்டிருக்கமுடியும்!

👉🏿 என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், *கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:* 
             கலாத்.1:2

கலாத்தியா நாட்டிலுள்ள கட்டிடங்களுக்கல்ல, கிறிஸ்தவர்களாகிய சபைகளுக்கே பவுல் எழுதியிருக்கிறார்!

👉🏿 மேலும் யூதேயாதேசத்திலே *கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.* 
            கலாத்.1:22

உயிரற்ற கட்டிடங்களுக்கு தாம் முகமறியாதவராக இருந்ததாக பவுல் எழுதியிருக்கமுடியாது! 

👉🏿 *கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல,* புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். 
            எபேசி.5:23

கிறிஸ்து கட்டிடத்திற்கு அல்ல, தமது ஜனங்களாகிய சபைக்கே தலையாயிருக்கிறார்!

👉🏿 ஆகையால், *சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல* மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். 
            எபேசி.5:24

உயிரற்ற கட்டிடங்களல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியமுடியும்!

👉🏿 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே *கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,* 
            எபேசி.5:25
*தாம் அதைத்* திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 
            எபேசி.5:26
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் *பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும்* தம்மைத்தாமே *அதற்காக* ஒப்புக்கொடுத்தார். 
            எபேசி.5:27

கிறிஸ்து உயிரற்ற கட்டிடத்தில் அல்ல, தமது ஜனங்களாகிய சபையில் அன்புகூர்ந்து,
அவர்களுக்காக தம்மை ஒப்புக்கொடுத்தார்!

👉🏿 .... *கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல* ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். 
            எபேசி.5:29

கர்த்தர் உயிரற்ற கட்டிடத்தை அல்ல, உயிருள்ள தமது ஜனங்களாகிய சபையையே போஷித்துக்காப்பாற்றுகிறார்!

👉🏿 மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், *வேறொரு சபையும் உடன்படவில்லை* என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 
             பிலிப்.4:15

கொடுக்கல் வாங்கல் காரியத்தில் கட்டிடம் அல்ல, தேவனுடையாஜனங்களாகிய பிலிப்பி சபையாரே பவுலுக்கு உடன்பட்டார்கள்!

👉🏿 இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை *அவருடைய சரீரமாகிய சபைக்காக,* என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன். 
       கொலோ.1:24

பவுல் கட்டிடத்திற்காக அல்ல, தேவனுடைய ஜனங்களாகிய தேவசபைக்காய் உபத்திரப்பட்டார். மேலும், உயிரற்ற கட்டிடம் அல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே கிறிஸ்துவின் சரீரமாய் இருக்கிறார்கள்!

👉🏿 உங்கள்பொருட்டுத் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே *நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.* 
       கொலோ.1:26

உயிரற்ற கட்டிடத்திற்கல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபைக்கே பவுல் ஊழியக்காரனானார்!

👉🏿 எப்படியெனில் சகோதரரே, யூதேயா தேசத்தில் *கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி,* அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள். 
             1தெச.2:14

உயிரற்ற கட்டிடங்களையல்ல, கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய ஜனங்களாகிய சபைகளை பின்பற்றியே தெசலோனிக்கே சபையார் தங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டார்கள்!

👉🏿 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், *நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு* எழுதுகிறதாவது: 
                2தெச.1:1

உயிரற்ற கட்டிடங்களல்ல, தேவனுடைய ஜனங்களாகிய சபையே பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கின்றனர்!

👉🏿 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், *தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?* 
          1தீமோத்.3:5

தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறிந்திருக்கிற ஒரு கண்காணி, கட்டிடத்தை அல்ல, தேவனுடைய சபையாகிய அவருடைய ஜனங்களையும் நன்றாய் விசாரிப்பார்!

👉🏿 ..... *சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால்* அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது. 
        1தீமோத்.5:16

உயிரற்ற கட்டிடமல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியவர்களாயிருக்கிறார்கள்!

👉🏿 *சபை கூடிவருதலைச்* சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.
          எபிரே.10:25

உயிரற்ற கட்டிடங்களல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே கூடிவரமுடியும்!

👉🏿 உங்களுடனேகூடத் *தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும்,* என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு *வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.* 
         1பேதுரு 5:13

உயிரற்ற கட்டிடமல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும் கட்டிடமல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபையே வாழ்த்து சொல்லமுடியும்!

👉🏿 யோவான் *ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும்* எழுதுகிறதாவது: 
           வெளிப்.1:4

ஆசியாவிலுள்ள 
ஏழு கட்டிடங்களுக்கல்ல, ஏழு பட்டணங்களில் இருந்த தேவனுடைய ஜனங்களாகிய
ஏழுசபைகளுக்கே யோவான் எழுதினார்!

👉🏿 *ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்* காதுள்ளவன் கேட்கக்கடவன்,
           வெளிப்.2:7

ஆவியானவர் உயிரற்ற கட்டிடங்களுக்கல்ல, உயிருள்ள தேவஜனங்களாகிய சபைக்கே சொன்னார். மேலும், கட்டிடங்களால் ஆவியானவர் சொல்லுகிறதை கேட்கமுடியாது!

👉🏿 .... அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று *எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்,* 
         வெளிப்.2:23

இயேசுகிறிஸ்து உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று கட்டிடங்களால் அறிந்துகொள்ளமுடியாது! தேவனுடைய உயிருள்ள சபையாகிய அவருடைய ஜனங்களாலேயே அதை அறிந்துகொள்ளமுடியும்!

மெய்யான திருச்சபையாகிய தேவனுடைய ஜனங்கள் கட்டிடங்களை சபை என்று எண்ணி, அவைகளைக் கட்டி அலங்கரிப்பதைப்பார்க்கிலும், கிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டவர்களாய்: தங்களை இரட்சிப்பின் வஸ்திரங்கள் மற்றும் நீதியின் சால்வை (ஏசாயா 61:10), தகுதியான வஸ்திரம், நாணம், தெளிந்த புத்தி, நற்கிரியைகள், (1தீமோத்.2:10), சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி (1பேதுரு 3:4) இவைகளால் அலங்கரித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம்!!
க. காட்சன் வின்சென்ட்
      (கோயம்பத்தூர்)
            8946050920



============================
வேதாகம திருச்சபை! (The Biblical Church) (பகுதி - 4)
===========================

வேதாகம திருச்சபை எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
தேவனுடைய மந்தை. (அப்.20:28)

கிறிஸ்துவின் சரீரம். (எபேசி.1:23; 4:12)

கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயம். (எபேசி.2:21)

தேவனுடைய வாசஸ்தலம். (எபேசி.2:22)

தேவனுடைய வீடு. (1தீமோத்.3:15)

இயேசுவின் வலதுகரத்தில் உள்ள குத்துவிளக்கு. (வெளிப்.1:20)

திருச்சபை எத்தனை வகைப்படும்?
1. உள்ளுர் திருச்சபை!
ஒரு குறிப்பிட்ட ஊரில் கூடிவருகிற இரட்சிக்கப்பட்ட மக்களே உள்ளூர் சபை அல்லது ஸ்தல சபையாவர்.

எருசலேம் சபை (அப்.8:1; 11:22), அந்தியோகியா சபை (அப்.13:1), கெங்கிரேயா சபை (ரோமர் 16:1), கொரிந்து சபை (1கொரி.1:2; 2கொரி.1:1), தெசலோனிக்கே சபை (1தெச.2:1), எபேசு சபை (வெளி.2:1), சிமிர்னா சபை (வெளி.2:8), பெர்கமு சபை (வெளி.2:12), தியத்தீரா சபை (வெளி.2:18), சர்தை சபை (வெளி.3:1), பிலதெல்பியா சபை (வெளி.3:7), லவோதிக்கேயா சபை (வெளி.3:14; கொலோ4:16) ஆகியவை ஸ்தலசபைகளுக்கு உதாரணங்கள்.

2. உலகலாவிய சபை!
உலகம் முழுவதும் உள்ள இரட்சிக்கப்பட்ட மக்களே
 உலகலாவிய சபையாவர். (1கொரிந்.12:13; எபேசி.2:11-19: கொலோ.1:6)

உலகம் முழுவதும் உள்ள ஸ்தல சபையாரே உலகலாவிய சபையின் அங்கமாக இருக்கின்றனர்.

யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் இருந்த சபைகள் (அப்.9:31), சீரியாவிலும் சிலிசியாவிலும் இருந்த சபைகள் (அப்15:41), பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களில் சிதறியிருந்தவர்களாகிய தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகள் (1பேதுரு 1:1,2) உலகலாவிய சபைக்கு உதாரணமாவர்!

3. அதரிசனமான சபை!
உலகலாவிய சபையிலிருந்து பரலோகத்திற்கு தெரிந்துகொள்ளப்பட்டு, தேவனால் மட்டுமே அறியப்பட்டவர்களே அதரிசனமான சபையாவர்.

இவர்கள் பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்கள் (எபிரே.12:23), அதாவது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள். (வெளி.21:27)

சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கப்போகிற, உலகலாவிய சபையிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் இவர்கள். (வெளி.7:9)

உலகலாவிய சபையில் தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களே அதரிசனமான சபையின் அங்கமாயிருக்கிறார்கள். (மத்.7:21,24,25; 13:8,23, 24,30, 24:31, 44-47; 25:2,4,6,7,10,19-23,33-40)

உலகலாவிய சபையில் இருக்கிற அனைவரும் அதரிசனமான சபையில் இருக்கமுடியாது!!

க. காட்சன் வின்சென்ட்
     (கோயம்பத்தூர்)
           8946050920



===========================
வேதாகம திருச்சபை! (The Biblical Church) (பகுதி - 5)
===========================

வேதாகம திருச்சபை யாருக்கு சொந்தமானது?

1️⃣ பிதாவாகிய தேவனுக்கு சொந்தமானது!

தனது நிருபங்களில் பல இடங்களில் "தேவனுடைய சபை" என்று குறிப்பிடுகிறார் பவுல். (1கொரி.1:2; 10:33; 11:16,22; 15:9; கலாத்.1:13; 1தெச.2:14; 2தெச.1:4; 1தீமோத்.3:5,15)

சபை தேவனுக்குள் இருப்பதாகவும் பவுல் குறிப்பிடுகிறார். (1தெச.1:1; 2தெச.1:1)

2️⃣ குமாரனாகிய தேவனுக்கு சொந்தமானது!

"இந்தக் கல்லின்மேல் *என் சபையைக்* கட்டுவேன்" என்றார் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து. (மத்.16:16,18)

"ஆகையால், உங்களைக்குறித்தும், *தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை* மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்" என்று எபேசு சபை மூப்பர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார் பவுல். (அப்.20:28)

*"கிறிஸ்துவின் சபையார்* உங்களை வாழ்த்துகிறார்கள்" என்கிறார். (ரோமர் 16:16)

சபை கிறிஸ்துவுக்குள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். (1கொரி.1:2; கலாத்.1:22; 1தெச.2:14; 2தெச.1:1)

கிறிஸ்து சபைக்கு தலையாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். (எபேசி.1:23; 5:23; கொலோ.1:18,24)

சபையை "கிறிஸ்துவின் சரீரம்" என்கிறார். (எபேசி.4:12; 5:23)

3️⃣ ஆவியான தேவனுக்கு சொந்தமானது!

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், *தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?* ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. *நீங்களே அந்த ஆலயம்"* என்கிறார் பவுல். (1கொரி.3:16,17)

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் *உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்,* நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" என்று கேட்கிறார். (1கொரி.6:19)

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும். 
ஜீவனுள்ள கற்களைப்போல *ஆவிக்கேற்ற மாளிகையாகவும்,* இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்" என்கிறார் பேதுரு. (1பேதுரு 2:5)

சபைகளில் ஆவியானவரே பேசுகிறார். (வெளி.2:7,11,17,29; 3:6,13,22)

தாகமாயிருக்கிறவரையும், விருப்பமுள்ளவரையும் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள ஆவியும் மணவாட்டியும் (சபையும்) வா என்கிறார்கள். (வெளி.22:17)

*சபையாகிய தேவனுடைய ஜனங்கள், பிதா குமாரன் பரிசுத்தஆவியாகிய திரியேக தேவனுக்கு மட்டுமே சொந்தமானவர்கள் ஆவர்.* 

க. காட்சன் வின்சென்ட்
      (கோயம்பத்தூர்)
            8946050920


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.